Description
எவ்வெவ கோட்படு பொருளும் அஞ்செழுத்தின்
அடக்கி அவற்றியல்பு காட்டி
மெய்வகை அஞ்சவத்தையினும் நிற்குமுறை
ஓதுமுறை விளங்கத் தேற்றி
அவ்வெழுத்தின் உள்ளீடும் அறிவித்துச்
சிவபோகத்து அழுத்தி நாயேன்
செய்வினையும் கைக் கொண்ட வேலப்ப
தேசிகன்தாள் சென்னி சேர்ப்பாம்
எனக் காஞ்சிபுராணத்துள் கூறியவாற்றால் இனிது விளங்கும்.
சிவஞானயோகிகள் ஜமதக்கினி முனிவருடைய புத்திரரும், அகத்திய மகா முனிவருடைய முதன்மாணாக்கரும், இடைச் சங்கப் புலவர் ஐம்பத்தொன்பதின்மருள் ஒருவருமாகிய திருணதூமாக்கினி என்னும் தொல்காப்பிய முனிவர் அருளிச் செய்த இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு உரையாசிரியராகிய இளம்பூரணர் செய்த உரையாகிய இளம்பூரணமும், சேனாவரையர் செய்த உரையாகிய சேனாவரையமும், நச்சினார்க்கினியர் செய்த உரையாகிய நச்சினார்க்கினியமும் எனப்படும் மூன்று உரைகளினும் உள்ள ஆசங்கைகளை நீக்கித் தெளிவிக்கும் பொருட்டு அத்தொல்காப்பியத்தின் பாயிரத்திற்கும், முதற்சூத்திரத்திற்கும் சூத்திரவிருத்தி எனப் பெயரிய பாடியமும், வடமொழித் தருக்க சங்கிரக அன்னம்பட்டீயங்களின் மொழிபெயர்ப்பும், நன்னூலுக்குச் சங்கரநமச்சிவாயப் புலவர் செய்த புத்துரையாகிய விருத்தியுரைத் திருத்தமும் செய்தருளினார்.
இவை மூன்றும் திராவிட மாபாடியத்திற்கு அங்கங்கள் எனப்படும்.